திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.14 திருப்பைஞ்ஞீலி பண் - காந்தாரபஞ்சமம் |
ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.
|
1 |
மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவத்
திருவிலார் அவர்களைத் தெருட்ட லாகுமே.
|
2 |
அஞ்சுரும் பணிமலர் அமுதம் மாந்தித்தேன்
பஞ்சரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.
|
3 |
கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
ஆடலை யுகந்தஎம் அடிகள் அல்லரே.
|
4 |
விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கீழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.
|
5 |
விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே.
|
6 |
தூயவன் தூயவெண் ணீறு மேனிமேற்
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவன் எனைச்செயுந் தன்மை யென்கொலோ.
|
7 |
தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறவல்செய் தாளோர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.
|
8 |
நீருடைப் போதுறை வானும் மாலுமாய்ச்
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.
|
9 |
பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையுஞ்
சாலியா தவர்களைச் சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.
|
10 |
கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
நண்புணர் அருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |